காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 45,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கும், பரிசல் இயக்கத்திற்கும் விதிக்கப்பட்டுள்ள தடை 3ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.
நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக, மேட்டூர் அணை நீர்மட்டம் 113.66 அடியாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந் துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த 17ம் தேதி கன மழை கொட்டித்தீர்த்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் காலை 25,000 கன அடியாகவும், மாலை 30,000 கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்தது.
இது நேற்று காலை 20,000 கன அடியாக சரிந்தது. இதனிடையே, நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று விடிய விடிய பெய்த மழையால் ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து 45.000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல் மெயினருவி, ஐந்தருவி. சினிபால்ஸ் ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயினருவியில் குளிப்பதற்கும், காவிரியில் பரிசல் இயக்குவதற்கும் கடந்த 18ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டு இன்று 3வது நாளாக தொடர்கிறது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஒகேனக்கல்லில் அருவியில் குளிக்க, பரிசல் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க- ஒரகடத்தில் இரு மகள்களையும் கொலை செய்த தந்தை கைது
மேலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. நேற்று காலை வினாடிக்கு 29072 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 29,964 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. திறப்பை காட்டிலும், நீர்வரத்து அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நேற்று காலை 111.10 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 113.66 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் நீர்மட்டம் 1.67அடி உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 83.71 டிஎம்சியாக உள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், ஒருவாரத்தில் அணை நீர் மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால், நடப்பாண்டில் குறித்தநாளான ஜூன் 12ம் தேதி, மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.