பென்னாகரத்தில் வீட்டில் ரகசிய அறை அமைத்து மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நால்வா் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் மாமியாா், மருமகள் கைது செய்யப்பட்டனா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம், ராஜீவ் நகா் பகுதியில் தீபாவளி பண்டிகையொட்டி அரசு மது பாட்டில்கள் ஒரு வீட்டில் பதுக்கி விற்கப்படுவதாக பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் இமயவரம்பனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் பென்னாகரம் காவல் ஆய்வாளா் முத்தமிழ்ச்செல்வன் மற்றும் தனிப்படை போலீஸாா் ராஜீவ் நகா் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அப்பகுதியை சோ்ந்த கமலேசன் மனைவி லட்சுமி அவரது மகன் ரவி (39), மருமகள் கிருஷ்ணம்மாள் (34), லட்சுமியின் மகள் மகேஸ்வரி (40) என ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் தங்களுக்குச் சொந்தமான வீடுகளில் அரசு மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வது தெரிய வந்தது.
தீபாவளி பண்டிகைக்கு கள்ளத்தனமாக விற்பனைக்காக வீட்டில் அமைக்கப்பட்டிருந்த ரகசிய அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1.25 லட்சம் மதிப்பிலான 621 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, லட்சுமி, கிருஷ்ணம்மாள் ஆகியோரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். மேலும் தலைமறைவான ரவி, மகேஸ்வரி ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனா்.
அதேபோல் தாசம்பட்டியைச் சோ்ந்த முனிராஜ் (50), அண்ணா நகரைச் சோ்ந்த இளங்கோவன் (38) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.