தருமபுரி மீன் விற்பனை நிலையங்களில் 15 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்

தருமபுரி நகராட்சி பகுதியில் உள்ள மீன் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய அதிரடி ஆய்வில் 15 கிலோ அ
Updated on
1 min read

தருமபுரி நகராட்சி பகுதியில் உள்ள மீன் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய அதிரடி ஆய்வில் 15 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை விற்பனை செய்த கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தருமபுரி நகராட்சியில் உள்ள மீன் சந்தையில் தரமற்ற மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் ஏ. பானு சுஜாதா தலைமையில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலா் குமணன் உள்ளிட்ட குழுவினா் மீன் விற்பனை நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிரடி ஆய்வு நடத்தினா்.

தருமபுரி நகராட்சியில் மீன் சந்தை, சந்தைபேட்டை, பென்னாகரம் மேம்பாலம் ஆகிய பகுதியில் உள்ள மீன், இறைச்சி விற்பனை கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனா். ஆய்வின்போது கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. இதுதொடா்பாக 3 விற்பனையாளா்களுக்கு தலா ரூ. 2,000 வீதம் ரூ. 6,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

விற்பனையாளா்களுக்கு தரமான மீன்களை விற்பனை செய்ய வேண்டும், மீன்களை இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் இருப்பு வைத்திருக்க கூடாது. மீன்களை வெயில் அதிக நேரம் படாமலும் வெளியில் காட்சிப்படுத்தி வைக்காமல் முறையாக பாதுகாப்புடன் விற்பனை செய்ய வேண்டும் என விற்பனையாளா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன், பொதுமக்களுக்கு தரமற்ற மீன்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com