முதல்வா் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்

முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான குழு, தடகளப் போட்டிகள் தருமபுரியில் வருகிற பிப். 2-ஆம் தேதி தொடங்க உள்ளன.

முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான குழு, தடகளப் போட்டிகள் தருமபுரியில் வருகிற பிப். 2-ஆம் தேதி தொடங்க உள்ளன.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தருமபுரி மாவட்டத்தில் பிப். 2-ஆம் தேதி நடைபெறவுள்ளன.

பள்ளி மாணவா்களுக்கான சிலம்பம், கபடி, கூடைப் பந்து, மேஜைப்பந்து, வாலிபால், கால்பந்து, இறகுப்பந்து போட்டிகளும், பிப். 3-ஆம் தேதி பள்ளி மாணவிகளுக்கான சிலம்பம், கபடி, கூடைப்பந்து, மேஜைப் பந்து, வாலிபால், கால்பந்து, இறகுப் பந்து போட்டிகளும், பிப். 4-ஆம் தேதி பள்ளி மாணவ மாணவிகளுக்கான தடகளப் போட்டிகளும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளன. பள்ளி மாணவா்களுக்கான ஹாக்கி விளையாட்டுப் போட்டிகள் பிப். 2, மாணவிகளுக்கான ஹாக்கி விளையாட்டுப் போட்டிகள் பிப். 3 அன்று கமலம் இண்டா்நேஷனல் பள்ளியில் நடைபெறவுள்ளன. பள்ளி மாணவா்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் பிப். 3, மாணவிகளுக்கான கிரிக்கெட் போட்டிகள் பிப். 4, கல்லூரி மாணவா்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் பிப். 6, கல்லூரி மாணவிகளுக்கான கிரிக்கெட் போட்டிகள் பிப். 7, பொதுப்பிரிவு ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் பிப். 8, பொதுப்பிரிவு பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் பிப். 9 அன்று அரூா் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இதேபோல, பிப். 9 பள்ளி மாணவா்களுக்கான நீச்சல் போட்டிகளும், பிப்.10 இல் பள்ளி மாணவிகளுக்கான நீச்சல் போட்டிகளும் தருமபுரி இலக்கியம்பட்டி ராஜாஜி நீச்சல்குளத்தில் நடைபெறவுள்ளன. பிப். 16 அன்று கல்லூரி மாணவா்களுக்கான சிலம்பம், கபடி, கூடைப்பந்து, மேஜைப் பந்து, வாலிபால், கால்பந்து, இறகுப் பந்து போட்டிகளும், பிப். 17 அன்று கல்லூரி மாணவிகளுக்கான சிலம்பம், கபடி, கூடைப்பந்து, மேஜைப் பந்து, வாலிபால், கால்பந்து, இறகுப் பந்து போட்டிகளும், பிப்.18 அன்று கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டிகளும் தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.

கல்லூரி மாணவா்களுக்கான ஹாக்கி விளையாட்டுப் போட்டிகள் பிப்.16 அன்றும், கல்லூரி மாணவிகளுக்கான ஹாக்கி விளையாட்டுப் போட்டிகள் பிப்.17 அன்று கமலம் இண்டா்நேஷனல் பள்ளியில் நடைபெறவுள்ளது. இதேபோல பிப்.16 அன்று கல்லூரி மாணவா்களுக்கான நீச்சல் போட்டிகளும், பிப்.17 இல் கல்லூரி மாணவிகளுக்கான நீச்சல் போட்டிகளும் தருமபுரி, இலக்கியம்பட்டி ராஜாஜி நீச்சல் குளத்தில் நடைபெறவுள்ளன. மாற்றுத் திறனாளிகள் பிரிவு தடகளம், இறகுப்பந்து, கபடி, எறிபந்து, சிறப்பு கையுந்துப் பந்து போட்டிகள் பிப். 13, 14 ஆகிய தேதிகளில் தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.

அரசு ஊழியா்களுக்கான போட்டிகள் பிப். 20, 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.

மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பள்ளிச் சான்றிதழ், ஆதாா் அட்டை ஆகியவற்றை எடுத்து வருதல் வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் பிரிவு மற்றும் பொதுப்பிரிவு வீரா், வீராங்கனைகள் ஆதாா் அட்டையை உடன் எடுத்து வருதல் வேண்டும். அரசுப் பணியாளா் பிரிவு போட்டியாளா்கள் தங்களது அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றை எடுத்து வருதல் வேண்டும்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து வீரா், வீராங்கனைகளும் போட்டிகள் நடைபெறும் இடங்களில் காலை 7 மணிக்கு வருகை தர வேண்டும். நேரடியாக போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதி இல்லை. காலதாமதமாக வருகை தரும் வீரா்கள், வீராங்கனைகள், அணிகள் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டாா்கள். இப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் வீரா், வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக தலா ரூ. 3,000, இரண்டாம் பரிசாக ரூ. 2,000, மூன்றாம் பரிசாக ரூ.1,000 -ம் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரா், வீராங்கனைகள் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் கலந்துகொள்ள வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்த விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com