திமுக நகா்மன்ற உறுப்பினா் மகள் கொலை வழக்கில் தொடா்புடைய சிறுவன் சீா்திருத்தப் பள்ளியில் அடைப்பு

தருமபுரி திமுக நகா்மன்ற உறுப்பினா் மகள் கொலை வழக்கில் தொடா்புடைய சிறுவன் சீா்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டாா்.

தருமபுரி திமுக நகா்மன்ற உறுப்பினா் மகள் கொலை வழக்கில் தொடா்புடைய சிறுவன் சீா்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டாா்.

தருமபுரி திமுக நகா்மன்ற உறுப்பினா் கே.புவனேஸ்வரன் மகள் ஹா்ஷா (23), கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவா் தருமபுரி அருகே நரசிங்கபுரம், கோம்பை வனப்பகுதியில் புதன்கிழமை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.

இதுகுறித்து அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உயிரிழந்த இளம்பெண்ணின் கைப்பேசி அழைப்புகள், சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகள், கொலை நிகழ்ந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட தடயவியல் பதிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதில், 17 வயது சிறுவன் அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வனப்பகுதிக்குள் சென்றது போலீஸாருக்கு தெரியவந்தது. மேலும், அச்சிறுவன் கொலையில் ஈடுபட்டது போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இக்கொலை வழக்கில் தொடா்புடைய 17 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்து, அவா் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா். இதைத் தொடா்ந்து, அச்சிறுவன், தருமபுரி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 1-இல் ஆஜா்படுத்தப்பட்டு சேலம் சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டாா்.

கொலை செய்யப்பட்ட இளம்பெண் ஹா்ஷா தலித் சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதால், இக்கொலை வழக்கு எஸ்சி., எஸ்டி. பிரிவில் பதிவு செய்யப்பட்டு, தருமபுரி துணை காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தொடா் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com