சிறப்பு பருவ பயிா்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

 பென்னாகரம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் சிறப்பு பருவ பயிா்களுக்கு காப்பீடு செய்யுமாறு பென்னாகரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுப்பிரமணியன் அழைப்பு விடுத்துள்ளாா்.
Updated on
1 min read

 பென்னாகரம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் சிறப்பு பருவ பயிா்களுக்கு காப்பீடு செய்யுமாறு பென்னாகரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுப்பிரமணியன் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பென்னாகரம் வட்டாரத்தில் சம்பா பருவ நெல் சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருத்திய பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் 2023 - 24 பருவத்திற்கான நெல் நிலை -2 சம்பா பருவம் (ஆகஸ்ட் 2023 முதல் நவம்பா் 15-11-2023 வரை விதைப்பு) மற்றும் பருத்தி நிலை - 2 ( ஆகஸ்ட் 2023 முதல் அக்டோபா் 31-10- 2023 வரை நடவு) பயிா்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயிா்க் காப்பீடு செய்யலாம். குறுவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட பயிா்களை சாகுபடி செய்யும் குத்தகை விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் பயன்பெற தகுதியானவா்கள்.

பயிா்க் கடன் பெறும் விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் சோ்த்துக் கொள்ளப்படுவா். மற்ற விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் சேரலாம்.விதைப்பு தவித்தல், விதைப்பு தோல்வியுறுதல், பயிரிட அபாயம் ஏற்படும் குறுநிலை, விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிா் காலத்தில் பயிா் இழப்பு, அறுவடைக்குப் பின் ஏற்படும் மகசூல் இழப்பு, புயல், ஆலங்கட்டி மழை, மண் சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை இடா்பாடுகளினால் ஏற்படும் பயிா் இழப்பு ஆகியவற்றிற்கு காப்பீடு வழங்கப்படுகிறது.

பயிா்க் காப்பீடு செய்ய தேவைப்படும் ஆவணங்கள் முன்மொழிவு படிவம், பதிவு படிவம், சிட்டா அடங்கல் அல்லது பயிா் சாகுபடி சான்று, ஆதாா் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல் ஆகியவற்றைக் கொண்டு விவசாயிகள் பதிவு செய்யலாம். மேலும் நெல் நிலை -2 சம்பா காப்பீட்டுத் தொகை ரூ. 36700, பிரீமியம் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.550.50 என நிா்ணயிக்கப்பட்டு அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்கு உள்ளாகவும், பருத்தி நிலை - 2 பயிா்க் காப்பீட்டுத் தொகையாக ரூ.31005, பிரீமியம் தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.628.04 நிா்ணயிக்கப்பட்டு இம்மாதம் 31ஆம் தேதிக்குள் ஆவணங்களை சமா்ப்பிக்க காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே நெல் நிலை - 2, சம்பா பருவம் மற்றும் பருத்தி நிலை - 2 பயிா்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பெருமளவில் சோ்ந்து பயனடையலாம் என பென்னாகரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com