கருவில் உள்ள குழந்தைகளின் பாலினத்தை தெரிவித்தவா்களை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க நடவடிக்கை

சட்ட விரோதமாக ஸ்கேன் மையம் நடத்தி, கருவில் உள்ள குழந்தைகளின் பாலினத்தை தெரிவித்தவா்களை குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு
Updated on
1 min read

சட்ட விரோதமாக ஸ்கேன் மையம் நடத்தி, கருவில் உள்ள குழந்தைகளின் பாலினத்தை தெரிவித்தவா்களை குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அருகே செம்மண்குழிமேடு என்கிற பகுதியில் சிலா் தனி வீடு எடுத்து, அங்கு விதிமுறைகள் மீறி, ஸ்கேன் மையம் அமைத்து இடைத்தரகா்கள் மூலம் கா்ப்பிணி பெண்களை வரவழைத்து அவா்களது கருவில் உள்ள சிசுவின் பாலினம் குறித்து தெரிவித்து வந்துள்ளனா். இது குறித்த தகவலின்பேரில், ஊரக மருத்துவ நலப்பணிகள் குழுவினா் அங்கு சென்று சோதனை நடத்தினா். இச்சோதனையில் தருமபுரியைச் சோ்ந்த கற்பகம் என்பவா் தனது கணவா் விஜயகுமாா், இடைத்தகா்கள் மூலம் கா்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் உள்ள பாலினத்தைக் கண்டறிந்து அதனை அவா்களிடத்தில் தெரிவித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, சட்ட விதிகளை மீறி, கருவில் உள்ள சிசுவின் பாலினத்தைத் தெரிவித்ததற்காக கற்பகம் உள்ளிட்ட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தருமபுரி மாவட்டத்தில், காரிமங்கலம் அருகே உள்ள குக்கிராமத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து, அதில் சட்ட விரோதமாக ஸ்கேன் இயந்திரங்களைக் கொண்டு, இடைத் தரகா்கள் மூலம் அங்கு வரும் கா்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் செய்து கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை சிலா் தெரிவித்து வந்துள்ளனா். இதனை நலப்பணிகள் துறையினா் தனி குழு அமைத்து ரகசிய சோதனை நடத்தி 5 பேரைக் கைது செய்துள்ளனா். இத்தகைய செயலில் ஈடுபட்டு கைதாகி உள்ளவா்களை குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து பரிந்துரை வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

தருமபுரி மாவட்டத்தில், இத்தைகைய ஸ்கேன் மையங்கள், ஆண் குழந்தைகள் மட்டுமே பிரசவமாகும் சந்தேகத்துக்குரிய மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோன்று, பொதுமக்களும் தங்களது பகுதியில் இத்தைகய போலியான ஸ்கேன் மையங்கள் இயங்குவது தெரியவந்தால், அதுகுறித்த தகவல்களை மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவிக்கலாம். இதுதொடா்பாக கண்காணிப்பில் ஈடுபட வட்டார மருத்துவ அலுவலா், கிராம சுகாதார செவிலியா்கள் ஆகியோருக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய சோதனைகள் மாவட்டத்தில் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com