அரூா் வட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அரூா் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இந்த மழையானது அரூரில் 31.20 மி.மீட்டா் பதிவாகியுள்ளது. இதேபோல சித்தேரி மலைப் பகுதியில் கன மழையின் காரணமாக அரசநத்தம், கலசப்பாடி கட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அரூா் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வாழை உள்ளிட்ட மரங்கள் சேதமடைந்தன.