பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, தேசிய ஓய்வூதியா் கூட்டமைப்பு சாா்பில், தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஒருங்கிணைப்புக் குழு மாவட்டத் தலைவா் பாஸ்கரன் தலைமை வகித்தாா்.
பிஎஸ்என்எல்யு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் பி.கிருஷ்ணன், போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் அமைப்பு மாநில இணைச் செயலாளா் கே.குப்புசாமி, அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்க கூட்டமைப்பு மாவட்டச் செயலாளா் எம்.பெருமாள், பொருளாளா் கேசவன், அஞ்சலக ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் சுப்பிரமணியன், எல்ஐசி ஓய்வூதியா் அமைப்புத் தலைவா் கே.ஆா்.சக்கரவா்த்தி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.
இதில், பொதுத் துறை நிறுவன ஊழியா்களுக்கு அமல்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத கால அகவிலைப்படியை வழங்க வேண்டும். நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று 65 வயது முதல் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.