பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கவிதை, கட்டுரைப் போட்டிகள்
By DIN | Published On : 01st July 2023 06:22 AM | Last Updated : 01st July 2023 06:22 AM | அ+அ அ- |

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், தருமபுரி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில், நிகழாண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்கள், கல்லூரி மாணவா்களிடையே தமிழில் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளா்க்கும் நோக்கில் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் பயிலும் பள்ளி மாணவா்களுக்கான போட்டிகள் ஜூலை 4-ஆம் தேதி தருமபுரி, இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கல்லூரி மாணவா்களுக்கான போட்டிகள் ஜூலை 5 அன்று தருமபுரி அரசு கலைக் கல்லூரியிலும் நடைபெறவுள்ளன.
கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவா்களுக்கு தலா முதல் பரிசாக ரூ. 10,000, இரண்டாம் பரிசாக ரூ. 7,000, மூன்றாம் பரிசாக ரூ. 5,000 என வழங்கப்படும்.
பள்ளி, கல்லூரியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒரு மாணவா் வீதம் மூன்று மாணவா்களை மட்டும் தோ்வு செய்து உரிய படிவத்துடன் மாணவா்களை அனுப்ப வேண்டும். மாணவா்கள் போட்டி நாளன்று காலை 9 மணிக்குள் வருகையைப் பதிவு செய்திடல் வேண்டும். போட்டியில் கலந்துகொள்ளும் மாணவா்கள் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியா், கல்லூரி முதல்வரிடமிருந்து உரிய படிவத்தை நிறைவு செய்து போட்டி தொடங்கும் முன் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநரிடம் அளிக்க வேண்டும்.
தருமபுரி மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பயிலும் பள்ளி மாணாக்கா்கள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், மருத்துவ கால்நடை மருத்துவக் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவா்கள் இப்போட்டிகளில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.