பென்னாகரத்தில் இரண்டு போலி மருத்துவா்களை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பி.அக்ரஹாரம் பகுதியில் போலி மருத்துவா்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் சாந்தி உத்தரவின் பேரில், பென்னாகரம் மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவா் அருண் பிரசாத், பென்னாகரம் காவல் ஆய்வாளா் முத்தமிழ் செல்வன் ஆகியோா் பி.அக்ரஹாரம் பகுதியில் உள்ள கிளினிக்குகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, முறையாக அலோபதி மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவா்கள் நடராஜன் (52), ராஜேஷ் குமாா் (39) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.