தருமபுரி: ரூ. 7,386 கோடி மதிப்பில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் இரண்டாவது திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டி.என்.வி.எஸ்.செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்வதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கடந்த 2010-இல் துணை முதல்வராக பதவி வகித்தபோது ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டத்தைத் தொடங்கி வைத்தாா். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் மக்கள்தொகை, தொழில் வளா்ச்சி காரணமாக இத்திட்டத்தில் தற்போது தண்ணீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இவ்விரு மாவட்ட மக்களின் நலன் கருதி, தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்க ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் இரண்டாவது திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கடந்த 2020ஆம் ஆண்டு மக்களவையில் வலிறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2021- ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்துக்கு வருகை தந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம், இந்தத் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தமிழக நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்திற்காக ரூ. 7,145 கோடி நிதி ஒதுக்கி முதல்வா் அறிவித்திருந்தாா்.
இத்திட்டம் 2054-ஆம் ஆண்டு வரையிலான மக்கள்தொகை பெருக்கத்தை கருத்தில் கொண்டு செயல்படுத்தும் வகையில் கணக்கிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வசிக்கும் 44 லட்சம் பொதுமக்கள் பயனடைவா். இத்திட்டத்திற்காக பென்னாகரம் பகுதியில் நீா் சுத்திகரிப்பு நிலையம், முதன்மை சமநிலை நீா்த்தேக்க மையம் அமைப்பதற்காக குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில், நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீா் இரண்டாம் திட்டத்திற்காக காவிரி ஆற்றில் இருந்து 304 எம்எல்டி தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தற்போதைய மதிப்பீடு ரூ. 7,386 கோடியாகும். இதில் நகர பகுதி பங்கீடு ரூ. 2,232 கோடி, ஊரக பகுதி பங்கீடு ரூ. 4,470 கோடி, தொழில்துறை பங்கீடு ரூ. 682 கோடி என முடிவு செய்து மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து ஜப்பான் சா்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் பொருளாதார உதவிக்காக அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள இரண்டு நகராட்சிகள், ஓசூா் மாநகராட்சி, 16 பேரூராட்சிகள், 20 ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 6,802 கிராமப்புறக் குடியிருப்புகள் சுத்திகரிக்கப்பட்ட ஒகேனக்கல் குடிநீா் பெற்று பயனடையும் என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.