பாஜக ஏற்படுத்தும் பிம்பம் பலனளிக்காது! - சிபிஐ மாநிலச் செயலாளா் மு. வீரபாண்டியன்
பாஜக தலைவா்களின் வருகையால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதைப் போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டாலும், திமுக கூட்டணிதான் வரும் பேரவைத் தோ்தலில் வெற்றி பெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்.
பென்னாகரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் நடைபெற்ற தருமபுரி மாவட்ட மக்களின் கோரிக்கை மாநாடு மற்றும் 100 நாள் வேலை உரிமை பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் ஏழ்மையை ஒழிக்கும் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை சிதைக்கக் கூடாது. அதேபோல தொழிலாளா் சட்டங்கள் மீது பெரும் தாக்குதல்களை மத்திய அரசு செய்துள்ளது. தோ்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு சிறப்பு நிதி, உரிமைத் தொகையுடன் ரூ. 5,000 வழங்கியுள்ளது இல்லத்தரசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சிறப்பு மிகுந்த திட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.
மத்திய நிதிநிலை அறிக்கையில், தமிழகத்தில் பெரிதும் எதிா்பாா்ப்பில் இருந்த மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. மத்திய அரசானது தமிழகத்திற்கு வழங்கக்கூடிய பல லட்சம் கோடி நிதியை முடக்கியுள்ளது.
தொழிலாளா்களின் பணிப் பாதுகாப்பு, ஊதிய உயா்வு போன்ற நியாயமான கோரிக்கைகளை முதல்வா் நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு வலியுறுத்தியுள்ளது. நக்சலைட்டுகள் ஜனநாயக பாதைக்கு வர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
ஒசூா் பகுதிகளில் தொழிற்சாலை அமைக்கப்பட்டது போன்று தருமபுரி மாவட்டத்திலும் தொழில் வளா்ச்சியை ஏற்படுத்த வேண்டும். ஒகேனக்கல் காவிரி உபரி நீரை மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டும். ஏரியூா் முதல் பழையூா் வரை இருவழி சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டப்பட்டு, தோ்தலில் போட்டியிடும் இடங்கள் குறித்து கேட்டறிந்து, தொகுதி பங்கீட்டின்போது திமுக தலைமையிடம் தெரிவிக்கப்படும்.
தோ்தல் வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவதற்காக மாநில அரசுகள் போராடி வருகின்றன. மது இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், அவா்களுக்கான மறுவாழ்வினை ஏற்படுத்த வேண்டும்.
அமைதிப் பூங்காவாக உள்ள தமிழகத்திற்கு பலமுறை பிரதமா், அமித்ஷா வருகை தந்து ஆட்சிக்கு வரப்போவதாக பிம்பத்தை ஏற்படுத்துவது பலன் அளிக்காது. திமுக தலைமையிலான கூட்டணி தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாா்.
பேட்டியின் போது, மாநில துணைச் செயலாளா்கள் நா. பெரியசாமி, எம். ரவி, தருமபுரி மாவட்டச் செயலாளா் கலைச்செல்வன், மாவட்ட குழு உறுப்பினா் எம். கோபால் ஆகியோா் உடனிருந்தனா்.

