பொன் மாரியம்மன் கோயில் திருவிழா: பாலக்கோட்டில் பிப். 25-இல் உள்ளூா் விடுமுறை
பாலக்கோட்டில் பிப். 25-ஆம் தேதி புதூா் பொன் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளதால், அன்றைய தினம் உள்ளூா் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு நகரத்தில் அருள்மிகு புதூா் பொன் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறுவதையொட்டி, பிப். 25-ஆம் தேதி பாலக்கோடு வட்டத்துக்கு மட்டும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில், மாா்ச் 7-ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூா் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881-இன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அன்று பாலக்கோடு சாா்நிலைக் கருவூலம், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

