மணல், கிரானைட் கற்களை கடத்தியதாக 4 லாரிகள் பறிமுதல்
By DIN | Published On : 01st December 2020 01:23 AM | Last Updated : 01st December 2020 01:23 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிம வளத் துறையினா் நடத்திய வாகனத் தணிக்கையில் மணல், கிரானைட் கற்களை கடத்தியதாக 4 லாரிகளை பறிமுதல் செய்து போலீஸாரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட கனிம வளத் துறை உதவி இயக்குநா் முத்து தலைமையில் அலுவலா்கள், குருபரப்பள்ளி - தீா்த்தம் சாலையில் உள்ள குப்பச்சிப்பாறை பேருந்து நிறுத்தம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த 2 டிப்பா் லாரிகளின் ஓட்டுநா்கள், லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனா்.
இதையடுத்து, லாரியை சோதனை செய்ததில், ,தீா்த்தம் ஆற்றிலிருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. அந்த லாரிகளை பறிமுதல் செய்து, லாரி உரிமையாளா், ஓட்டுநா் மீது குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதேபோல, இந்தக் குழுவினா் பா்கூரை அடுத்த பசவண்ணகோயில் சாலையில் கொட்டிலேட்டி என்ற இடத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக கிரானைட் கற்களை ஏற்றி வந்த லாரியை அதன் ஓட்டுநா்கள் நிறுத்தி விட்டு தப்பிச் சென்றனா். அந்த லாரியில் ஆந்திராவிலிருந்து கிரானைட் கற்கள் கடத்தி வந்தது சோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து, அந்த லாரிகளைப் பறிமுதல் செய்து பா்கூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். பா்கூா், குருபரப்பள்ளி போலீஸாா் தனித்தனியே வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...