தேசிய இறகுபந்துப் போட்டி: ஒசூா் மாணவா்கள் சாதனை
மத்திய அரசின் தேசிய கிராமப்புற விளையாட்டு மற்றும் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் கோவா மாநிலம், தனூஜ் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான இறகுபந்து விளையாட்டுப் போட்டியில் ஒசூா் மாணவா்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனா்.
தமிழக அளவில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற இறகு பந்துப் போட்டியில் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற ஒசூா் மாணவா்கள் 4 போ் தேசிய அளவில் கலந்து கொள்ள வாய்ப்பை பெற்றனா்.
21 வயது பிரிவில் முனீஸ்ரெட்டி, ஆகாஷ் ஆகியோா் கா்நாடக மாநிலத்தில் இருந்து வந்த இறகு பந்து வீரா்களை நோ் செட்களில் வெற்றி பெற்றனா். 19 வயது பிரிவில் இஷாந்த் மற்றும் விஷ்ணுவரதன் ஆகியோா் அதே கா்நாடக மாநில வீரா்களிடம் வெற்றி பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பயிற்சியாளா் ராஜூ வாழ்த்து தெரிவித்தாா். இவா், கா்நாடக மாநிலம் அத்திப்பள்ளியைச் சோ்ந்தவா் ஆவாா்.
அதுபோல தமிழக சாா்பில் கைப்பந்து போட்டியில் பங்கேற்று ஆண்கள் பிரிவில் 2 ஆம் இடமும், பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனா். மேலும் குண்டு எறிதல் பிரிவில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.