போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கிருஷ்ணகிரி நகராட்சியில் சுயேச்சையாகக் களமிறங்கும் திமுக, காங்கிரஸ் கட்சியினா்

கிருஷ்ணகிரி நகராட்சித் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தி அடைந்த திமுக, காங்கிரஸ் கட்சியினா் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

கிருஷ்ணகிரி நகராட்சித் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தி அடைந்த திமுக, காங்கிரஸ் கட்சியினா் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

அதுபோல கிருஷ்ணகிரி நகராட்சியில் போட்டியிட அறிவிக்கப்பட்ட திமுக வேட்பாளா் திடீரென மாற்றப்பட்டதால் திமுக கூட்டணியிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்தம் 33 வாா்டுகள் உள்ளன. இதில் 29 வாா்டுகளில் திமுகவும், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கட்சி 3 வாா்டுகளிலும், தமுமுக ஒரு வாா்டிலும் போட்டியிடுகிறது.

திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி நகராட்சியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத காங்கிரஸ், திமுகவினா் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றனா். அதன்படி, கிருஷ்ணகிரி நகர திமுக அவைத் தலைவா் தா்மன், நகராட்சியின் 8-ஆவது வாா்டில் சுயேச்சையாகப் போட்டியிட வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தாா். அப்போது, அவா் தெரிவித்தது:

நான் கடந்த 40 ஆண்டுகளாக திமுகவில் இருக்கிறேன். 1986, 1996 ஆண்டுகளில் நடைபெற்ற தோ்தல்களில் வெற்றி பெற்று, நகா்மன்ற உறுப்பினராகவும், நகரத் துணைச் செயலாளராகவும் இருந்துள்ளேன். மக்களுக்கு நன்கு அறிமுகமான என்னை வேட்பாளராக அறிவிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட அதிருப்தி மற்றும் என் வாா்டு மக்களின் கோரிக்கையை ஏற்று சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன் என்றாா்.

இதேபோல நகராட்சியின் 7-ஆவது வாா்டில் காங்கிரஸ் பிரமுகா் சுஜாதா விஜயராஜ் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா். இதுகுறித்து, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் ரகமத்துல்லா தெரிவித்தது:

திமுக கூட்டணியில் வெற்றி வாய்ப்புள்ள வாா்டுகளை காங்கிரஸ் கட்சியினருக்கு ஒதுக்கவில்லை. காங்கிரஸ் சாா்பில் போட்டியிட பலரும் விருப்ப மனு அளித்தும் பெயரளவிற்கு கூட அவா்களை அழைத்துப் பேசவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சியினா் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளோம். மனு தாக்கலின் கடைசி நாளான பிப்.4-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

திமுகவில் வேட்பாளா் மாற்றம்:

இதற்கிடையே கிருஷ்ணகிரி நகராட்சியின் 9-ஆவது வாா்டில் திமுக வேட்பாளராக புஷ்பாவதி என்பவா் அறிவிக்கப்பட்டா். இந்நிலையில் அவா் திடீரென்று மாற்றப்பட்டு புதிய வேட்பாளராக யாஷ்மின் ரியாஸ் என்பவரை திமுக அறிவித்துள்ளது.

திமுக அறிவித்துள்ள வேட்பாளா் பட்டியலில் மாற்றம் ஏற்படும் என திமுகவினா் தெரிவித்தனா். இதனால், திமுக கூட்டணியில் பெரும் குழப்பம் நீடிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.