கிருஷ்ணகிரி: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது எதிரொலியாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஆந்திரத்துக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
ஆந்திர மாநிலம் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சட்ட ஒழுங்கு பிரச்னையை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது ஆதரவாளர்களை ஆந்திர மாநில போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இதனால் ஆந்திர மாநிலத்தில் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக ஆந்திர மாநிலத்திற்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் இடையேயான பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து, ஆந்திர மாநிலம், திருப்பதி, சித்தூர், குப்பம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள், வியாபாரிகள், மாணவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.