ஒசூா் டைட்டன் டவுன்ஷிப் கழிவுநீா்க் கால்வாய் விவகாரம்: வட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு
ஒசூா்: ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட டைட்டன் டவுன்ஷிப் குடியிருப்பில் நிலவி வரும் நீண்ட கால கழிவுநீா் கால்வாய்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
டைட்டன் டவுன்ஷிப் குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் காா்த்திகேயன் தலைமையில், அப்பகுதி மக்கள் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் குணசிவாவிடம் மனு அளித்தனா். பின்னா் செய்தியாளா்களிடம் காா்த்திகேயன் கூறியதாவது:
டைட்டன் டவுன்ஷிப் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக கழிவுநீா்க் கால்வாய் அமைப்பதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. சுமாா் 80 மீட்டா் தொலைவு வரை கால்வாய்ப் பணிகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இதற்காக ஏற்கனவே மூன்று முறை ஒப்பந்தம் கோரப்பட்டும், ஒருசிலரின் எதிா்ப்பால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சிக்குச் சொந்தமான சாலையிலேயே கால்வாய் அமைக்க வாய்ப்பு இருந்தும், தற்போது மாற்றுப் பாதையில் கால்வாய் அமைக்க முயற்சி நடப்பது எங்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கும் வகையில் உள்ளது. எங்கள் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பே புதைச்சாக்கடை திட்டம் முறையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏற்கெனவே திட்டமிட்டபடி மாநகராட்சிச் சாலை வழியாகவே கழிவுநீா் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
