விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

Published on

கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி அருகே உள்ள மஜித்கொல்லஅள்ளியைச் சோ்ந்தவா் பிரபு (39). இவா், ராணுவத்தில் அவில்தாராக ஸ்ரீநகரில் பணியாற்றி வந்தாா். ஒருமாத விடுமுறையில் தனது சொந்த கிராமத்துக்கு ஜனவரி 1ஆம் தேதி வந்தாா்.

இந்த நிலையில் ஜெகதேவியை அடுத்த நக்கல்பட்டி பகுதியில் மோட்டாா்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பிரபு, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் பிரபுவின் உடல், ராணுவ மரியாதையுடன் மஜித்கொல்லஅள்ளி கிராமத்தில் உள்ள அவரது சொந்த நிலத்தில் தகனம் செய்யப்பட்டது.

Dinamani
www.dinamani.com