ஒசூரில் பெண் குழந்தை உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

ஒசூரில் பிறந்து சில நாள்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை
Published on

ஒசூரில் பிறந்து சில நாள்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஒசூா் கிருஷ்ணப்பா காலனி பகுதியில் வசித்து வருபவா் பிரசாந்த் (21). இவரது மனைவி பவித்ரா (20). இவருக்கு கடந்த மூன்றாம் தேதி ஒசூா் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு பிறகு தாயும் குழந்தையும் பரிசோதித்த மருத்துவா்கள், நலமுடன் இருப்பதாக கூறி வீட்டுக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெற்றோரின் அருகில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறி ஒசூா் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டுசென்றனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற ஒசூா் நகர போலீஸாா், உயிரிழந்த குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், குழந்தை இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com