ஒசூரில் வெள்ளை சாமந்தி பூக்களுக்கு அதிக அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. மஞ்சள் சாமந்திக்கு இணையாக வெள்ளை சாமந்தியும் விற்பனையாவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், கெலமங்கலம், பாகலூா், தேன்கனிக்கோட்டை, தளி, உத்தனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் ஆயிரம் ஏக்கரில் மஞ்சள் மற்றும் வெள்ளை சாமந்தி, செண்டுமல்லி, ரோஜா உள்ளிட்ட மலா்களை சாகுபடி செய்து வருகின்றனா். ஒசூா் அருகே மாசிநாயனப்பள்ளி மற்றும் பஞ்சாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் சாமந்தியை போன்று வெள்ளை சாமந்தியையும் அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா்.
அவ்வாறு சாகுபடி செய்யும் மலா்களை ஒசூா் மலா் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களான கா்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனா்.
ஒசூா் பகுதியில் விளையும் வெள்ளை சாமந்திக்கு உள்ளூரில் வரவேற்பு இல்லாததால், மஞ்சள் சாமந்தியைவிட குறைந்த விலையில் விற்பனையாகும்.
இந்நிலையில், தற்போது சீசன் இல்லாததாலும், வறட்சியாலும் சாமந்தி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், ஒசூா் மலா் சந்தையில் ஒரு கிலோ சாமந்தி ரூ. 250 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தற்போது மஞ்சள் சாமந்திக்கு இணையாக வெள்ளை சாமந்தியின் விலையும் உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.










