நாமக்கல், ஜூன் 13: நாமக்கல் வேளாண் விற்பனைச் சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.7 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில், வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். ஆத்தூர், கெங்கவல்லி, எருமப்பட்டி, சேந்தமங்கலம், மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வருவர். கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டப் பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பருத்தியை ஏலம் எடுக்க வருவர். வியாழக்கிழமை ஏலம் மூலம் விற்பனை செய்வதற்காக 400 மூட்டை பருத்தி கொண்டு வரப்பட்டது. இதில், ஆர்.சி.ஹெச் ரகம் ரூ.5,089 முதல் ரூ.5,899 வரையில் ஏலம் போனது. மொத்த விற்பனை ரூ.7 லட்சமாகும். டி.சி.ஹெச் ரக பருத்தி உற்பத்தி இல்லாததால், தற்போது ஆர்.சி.ஹெச் ரகம் மட்டுமே ஏலத்துக்கு கொண்டு வரப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.