மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,500 போலீஸார்
By DIN | Published On : 17th April 2019 02:46 AM | Last Updated : 17th April 2019 02:46 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,500 போலீஸார் ஈடுபட உள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியது: நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 661 இடங்களில் 1,621 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் அமைதியாக நடைபெறவும், அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கவும், போலீஸார், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற போலீஸார் என, 2,500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மேலும், கேரள மாநிலத்தில் இருந்த சிறப்பு ஆயுதப் படையினர் 160 பேர், பந்தனம்திட்டு, பாலக்காடு பகுதியில் இருந்து 100 ஆயுதப்படை போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ராணுவத்தினர், நாமக்கல்லில் 200 பேரும், வேலூர் மாவட்டத்தில் இருந்து 300 பேரும் என மொத்தம் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 75 பேர் பணியமர்த்தப்படுகின்றனர். 24 கல்லுôரிகளைச் சேர்ந்த, 450 தேசிய பாதுகாப்பு படை மாணவர்களும் பங்கேற்கின்றனர். மாவட்டத்தில் 26 இடங்களில் உள்ள, 94 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு, கேரள சிறப்பு ஆயுதப் படையினர் பணியில்
ஈடுபடுத்தப்படுவர்.
குமாரபாளையம் தொகுதியில், மூன்று இடங்களில் 12 வாக்குச் சாவடியும், இரண்டு இடங்களில் 10 வாக்குச் சாவடியும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், மூன்று இடங்களில் கேரள சிறப்பு ஆயுதப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மேலும், ஒரு காவல் நிலையத்துக்கு ஒரு ஆய்வாளரும், உதவி ஆய்வாளர் தலைமையில் 30 அதிவிரைவு படையும் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட எல்லையான, வளையப்பட்டி, பரமத்தி வேலூர், கொக்கராயன்பேட்டை சோதனைச் சாவடியில், கேரள போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவர். வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் ஆகியவற்றை எடுத்துச் செல்லும், 136 வாகனங்களில், ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள், எந்த வழியாக செல்கிறதோ, அந்த வழியாகவே மீண்டும் வந்து குறிப்பிட்ட இடத்தை சென்றடைய வேண்டும். அதற்கான வழித்தட புகைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...