வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்: சுயேச்சை நூதனப் போராட்டம்

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்க முடியாது என்பதால், தேர்தல் ஆணையமே பணம் விநியோகித்தை செயல்படுத்தலாம்
Updated on
1 min read


தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்க முடியாது என்பதால், தேர்தல் ஆணையமே பணம் விநியோகித்தை செயல்படுத்தலாம் என்பதை வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகம் முன் சுயேச்சை வேட்பாளர் ஒற்றைக்காலில் நின்றபடி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டியைச் சேர்ந்தவர் தி.ரமேஷ் (39). யோகா ஆசிரியரான இவர், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், அகிம்சா சோஷியலிஸ்ட் கட்சி சார்பில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். கடந்த மாதம் 19-ஆம் தேதி வேட்புமனு தாக்கலன்று மகாத்மா காந்தி வேடமணிந்து வந்தவர், அன்று முதல் தனது அலங்காரத்தை மாற்றாமல், அதே நிலையில் பிரசாரம் செய்து வந்தார்.
நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.50 லட்சம் தேர்தல் செலவினத்துக்கு கடன் கேட்டது, அதற்காக வங்கி வளாகம் முன் வாடிக்கையாளர்களிடம் யாசகம் கேட்டது, நாமக்கல் குளக்கரை திடல் பகுதியில் உள்ள பாறையில் தன்னுடைய சின்னமான மட்டைப்பந்துடன் கொளுத்தும் வெயிலில் அமர்ந்திருந்தது என அவர் காந்தி வேடமணிந்து பல்வேறு வகையில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்த அவர், தன்னுடைய சின்னமான மட்டைப்பந்தை கையில் ஏந்தியபடி, வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதை தடுக்க முடியாது; அதனால் தேர்தல் ஆணையமே வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என்ற வாசகம் அடங்கிய பதாகையை கழுத்தில் தொங்கவிட்டபடி ஒற்றைக்காலில் நின்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த நல்லிபாளையம் போலீஸார், சுயேச்சை வேட்பாளருக்கு அறிவுரை கூறி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com