நில மோசடிக்கு உடந்தையாக இருந்தவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே மங்களபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன் (45). கொசுவலை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அதே ஊரைச் சேர்ந்த மளிகைக் கடை நடத்தி வரும் ரெங்கராஜன் என்பவர் தனது நிலத்தை விற்பனை செய்வதாகக் கூறி ரூ. 9 லட்சம் பெற்றுக் கொண்டு நிலத்தை கிரயம் செய்து தராமல் மோசடி செய்து வருவதாகவும், அதற்கு அவரது மனைவி ராணி, உறவினர்கள் சண்முகம், சந்திரன்(55) ஆகியோர் உடந்தையாக இருப்பதாகவும் கூறி இருந்தார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சந்திரனை கைது செய்தனர். ரெங்கராஜன் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.