ஆசிரியர் தகுதித் தேர்வு: முதல் தாளை 2,505 பேர் எழுதினர் : 404 பேர் பங்கேற்கவில்லை
By DIN | Published On : 09th June 2019 05:25 AM | Last Updated : 09th June 2019 05:25 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளை ஏழு மையங்களில் 2,505 பேர் எழுதினர். இத் தேர்வுக்கு விண்ணப்பித்த 404 பேர் பங்கேற்கவில்லை,
நாமக்கல் மாவட்டத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் ஏழு மையங்களிலும், இரண்டாம் தாள் 31 மையங்களிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் தாள் தேர்வை எழுத 2,909 பேர் விண்ணப்பித்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற தேர்வில் 2,505 பேர் மட்டுமே பங்கேற்றனர். 404 பேர் பங்கேற்கவில்லை. தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 49 மாற்றுத் திறனாளிகளில், 38 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
இத் தேர்வானது, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் (தெற்கு) அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் (வடக்கு) அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் - மோகனூர் சாலை ஜெய்விகாஷ் மேல்நிலைப் பள்ளி, போதுப்பட்டி கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காவேட்டிப்பட்டி குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் அனிதா, முதன்மைக் கல்வி அலுவலர் ப.உஷா ஆகியோர் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு முடிந்ததும், சீல் வைக்கப்பட்ட விடைத்தாள்கள் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டன. இரண்டாம் தாள் தேர்வு முடிந்ததும் அனைத்தும் மொத்தமாக சென்னை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாள் நடைபெறுகிறது. இத்தேர்வு எழுத நாமக்கல் மாவட்டத்தில் 12,348 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 31 மையங்களில் தேர்வானது நடைபெறுகிறது. கல்வித்துறை சார்ந்த பணியாளர்கள் 900 பேர் பணியில் ஈடுபடுகின்றனர். தேர்வையொட்டி, அனைத்து மையங்கள் முன்பாகவும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கைக்குட்டை, கடிகாரம், ஷு, கால்குலேட்டர், செல்லிடப்பேசியுடன் தேர்வறைக்குள் வரக்கூடாது என தேர்வர்களுக்கு அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.