நாமக்கல், ஜூன்13: நாமக்கல் மாவட்டத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள மழலையர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் 57 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மழலையர் பள்ளி வகுப்புகள் (எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி.) நிகழாண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, நாமக்கல் வட்டார வள மையத்தில், வியாழக்கிழமை காலை மாண்டிசோரி முறையில் குழந்தைகளுக்கு கற்பிப்பது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது.
இப் பயிற்சி முகாமை, முதன்மைக் கல்வி அலுவலர் ப.உஷா தொடக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் கவிதா, கருத்தாளர்கள் நிர்மலா, உமா ஆகியோர் குழந்தைகளை கையாள்வது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 60 ஆசிரியர்கள், ஆசிரியைகள் பங்கேற்றனர்.