திமுக கூட்டணி வெற்றி பெறும்: இ. ஆர். ஈஸ்வரன்
By DIN | Published On : 22nd March 2019 09:10 AM | Last Updated : 22nd March 2019 09:10 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் இ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்தார்.
ராசிபுரத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் மாவட்ட, பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் ராசிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கொங்குநாடு மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.ஆர். ஈஸ்வரன் பின்னர் செய்தியாளர்களிடம்
கூறியதாவது:
திமுக கூட்டணி கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களோடு ஆலோசனை நடத்தியுள்ளோம்.
இந்தத் தொகுதியில் தண்ணீர் பிரச்னை அதிக அளவில் உள்ளது. 50 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத திருமணி முத்தாறு திட்டத்தை அரசுகள் செயல்படுத்தி இருந்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் பிரச்னை வந்திருக்காது. திருமணி முத்தாறு திட்டத்தை நிறைவேற்றி நாமக்கல் மக்களவைத் தொகுதி தண்ணீர் பஞ்சத்தை தீர்ப்போம் என்ற வாக்குறுதியை தருகிறோம்.
விவசாயிகளைக் காப்பாற்றுவதுபோல தற்போது பாஜக நடிக்கிறது. தமிழக விவசாயிகள் தில்லியில் போராடியபோதுகூட பிரதமர் அவர்களை சந்திக்கவில்லை. இந்தத் தேர்தலில் மிகப் பெரிய வித்தியாசத்தில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...