குமாரபாளையத்தில்தொடரும் விசைத்தறி தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்
By DIN | Published On : 05th May 2019 05:16 AM | Last Updated : 05th May 2019 05:16 AM | அ+அ அ- |

குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 75 சதவீத கூலி உயர்வு வழங்கக் கோரி விசைத்தறித் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 4-ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது. இதனால், விசைத்தறி ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதோடு, தொழிலாளர்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
குமாரபாளையம் நகரில் சின்னப்பநாயக்கன்பாளையம், காவேரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கக் கோரி ஜனநாயக விசைத்தறித் தொழிலாளர் சங்கம் சார்பில் தொழிலாளர்கள் கடந்த ஏப்.1-ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், 75 சதவீதம் கூலி உயர்வு வழங்கக் கோரி சிஐடியூ விசைத்தறித் தொழிலாளர் சங்கம் மே 1-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தது.
இதனால், குமாரபாளையம் நகரம் மட்டுமல்லாமல் சடையம்பாளையம், கத்தேரி, ஓலப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் விசைத்தறிக் கூடங்கள் மூடப்பட்டுள்ளதோடு, விசைத்தறிகளும் இயங்கவில்லை. இப்போராட்டத்தால் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதோடு, தொழிலாளர்களுக்கும் வேலையிழப்பு ஏற்பட்டு, வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் யாரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்காத நிலை நீடிப்பதால் இழுபறி தொடர்ந்து வருகிறது. காவல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 10 சதவீதத்துக்கு மேல் கூலி உயர்வு வழங்க முடியாது என உரிமையாளர்கள் தரப்பில்
தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் விசைத்தறித் தொழிலாளர் கூலி உயர்வு பிரச்னையில் தலையிட்டு முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியூ, ஏஐடியூசி மற்றும் ஹெச்எம்எஸ் தொழிற்சங்கங்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் மே 6-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அறிவித்துள்ளன.