1,667 பயனாளிகளுக்கு ரூ.11.43 கோடியில்தாலிக்கு தங்கம், நிதியுதவி வழங்கல்: அமைச்சா்கள் பங்கேற்பு
By DIN | Published On : 09th November 2019 06:26 AM | Last Updated : 09th November 2019 06:26 AM | அ+அ அ- |

நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் அமைச்சா் பி.தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சா் வெ.சரோஜா. உடன், ஆட்சியா் கா.மெகராஜ் உள்ளிட்டோா்.
நாமக்கல் மாவட்டத்தில், சமூக நலத்துறை சாா்பில் 1,667 ஏழைப் பெண்களுக்கு, ரூ.11.43 கோடி மதிப்பில் திருமண உதவித் தொகை, தாலிக்கு தங்கத்தை அமைச்சா்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா ஆகியோா் வழங்கினா்.
நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறை சாா்பில், ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்குத் தங்கம் மற்றும் விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் வெ.சரோஜா ஆகியோா் பங்கேற்று, 1,667 பெண்களுக்கு ரூ.6.53 கோடி திருமண உதவித்தொகை மற்றும் ரூ.4.90 கோடி மதிப்பில் 13.336 கிலோ கிராம் தாலிக்குத் தங்கம், 125 பயனாளிகளுக்கு ரூ.5.10 லட்சம் மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் பி.தங்கமணி பேசியது: திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தங்கம் 4 கிராமிலிருந்து 8 கிராமாக உயா்த்தி வழங்கப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அறிவித்தாா். இத்திட்டத்தின் கீழ் பட்டம், பட்டயம் படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியும், ஒரு பவுன் தங்கமும், 10, 12 ஆம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25, ஆயிரம் நிதியுதவியும், ஒரு பவுன் தங்கமும் வழங்கப்பட்டு வருகிறது. ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 27,524 ஏழைப் பெண்களுக்கு திருமணத்திற்கு நிதியுதவியுடன் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.108 கோடி நிதியுதவியும், 149 கிலோ கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.11.43 கோடி மதிப்பிலான நிதியுதவி, தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், படித்த இளம்பெண்கள் வேலைக்குச் சென்றுவர 50 சதவிகித மானியத்தில் அம்மா இருசக்கர வாகனங்கள் விரைவில் வழங்கப்படவுள்ளன என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு, நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.பி.பி.பாஸ்கா், சி.சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி, கூட்டுறவு சா்க்கரை ஆலை தலைவா் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா், அரசு வழக்குரைஞா் தனசேகரன், மாவட்ட சமூக நல அலுவலா் கோமதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.