கார் - லாரி மோதல்:குழந்தை உள்பட 5 பேர் பலி
By DIN | Published On : 22nd September 2019 01:14 AM | Last Updated : 22nd September 2019 01:14 AM | அ+அ அ- |

நாமக்கல் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், குழந்தை உள்பட 5 பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரைச் சேர்ந்தவர் சரவணன் (40). ஜவுளித் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி வசந்தி (38), மகன் பிஜின் (1), உறவினர்களான ராஜேந்திரன் (64), கண்ணம்மாள்(58), கேசவன் (57) ஆகிய 6 பேரும், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, மாவட்ட எல்லையில், எருமப்பட்டி ஒன்றியத்துக்குள்பட்ட தலைமலை சஞ்சீவிராயப் பெருமாள் கோயிலுக்கு அதிகாலையில் காரில் சென்றனர். அங்கு சுவாமி தரிசனம் முடித்துக் கொண்டு, மதியம் ஒரு மணியளவில் அனைவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
வரகூர் அருகே மாணிக்கவேலூர் எனும் இடத்தில் வந்தபோது காரும், நாமக்கல்லில் இருந்து துறையூர் நோக்கிச் சென்ற லாரியும், நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில், சரவணன், ராஜேந்திரன், கண்ணம்மாள், குழந்தை பிஜின், கேசவன் ஆகிய 5 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
எருமப்பட்டி போலீஸார் காரின் இடிபாடுகளில் சிக்கியிருந்த வசந்தியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G