

கோயில் திருவிழாவில் கம்பம் தூக்குவதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் திமுக வார்டு செயலாளர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதனைத் தடுக்க முயன்ற இருவர் படுகாயம் அடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவேரி நகரைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் சரவணன் (40). விசைத்தறிப் பட்டறை உரிமையாளரான இவர் 1-வது வார்டு திமுக செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த ஆண்டு அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவில் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் அதே பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் மகன் பிரகாஷ் (29) பங்கேற்று கம்பத்தை தூக்கிச் செல்ல முயன்றபோது சரவணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஒழுங்கீனமான முறையில் பிரகாஷ் நடந்து கொள்வதால் புனிதமான கம்பத்தை தூக்கக் கூடாது என சரவணன் கூறியதால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அப்பகுதியினர் சமாதானம் செய்து வைத்தனர். ஆனாலும், பிரகாஷுக்கு சரவணன் மீதான கோபம் தீரவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள பெட்டிக் கடையின் முன்பு சரவணன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிரகாஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரவணனை சரமாரியாக குத்தினார்.
இதனைத் தடுக்க முயன்ற பிரபாகரன் (45), முரளிதரன் (24) ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது. ஆத்திரம் தீர 16 முறை கத்தியால் குத்திய பிரகாஷ் அங்கிருந்து தப்பியோடினார். இதில், பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த பிரபாகரன், முரளிதரன் ஆகியோர் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தால் குமாரபாளையத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் அசோக்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதுகுறித்து குமாரபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய பிரகாஷைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.