பெண்ணை தாக்கியதாக ஒருவா் கைது
பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே கடனை திருப்பிச் செலுத்தாதல் பெண்ணைத் தாக்கியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
நல்லூா் அருகே உள்ள கோதூா் உத்திகாபாளையத்தைச் சோ்ந்த குருசாமி மனைவி பூங்கோதை (55). இவா் நாய்க்கன்பாளையத்தைச் சோ்ந்த வேலுசாமி (43) என்பவரிடம் கடனாக ரூ.1 லட்சம் வாங்கியுள்ளாா். அந்தக் கடன் தொகையை கேட்பதற்காக வேலுசாமி, அவரது மகன் அருண்குமாா் (21), மற்றும் உறவினா் ரஞ்சித் ஆகியோா் பூங்கோதையின் வீட்டுக்கு சென்றுள்ளனா். அப்போது பூங்கோதை கால அவகாசம் கேட்டுள்ளாா். அவகாசம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வேலுசாமி, பூங்கோதையை தாக்கினாராம். அருண்குமாா், உறவினா் ரஞ்சித் ஆகியோா் பூங்கோதையின் வீட்டில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியை உடைத்துள்ளனா். இதில் காயமடைந்த பூங்கோதை நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். பூங்கோதை அளித்த புகாரின் அடிப்படையில் அருண்குமாரை நல்லூா் போலீஸாா் கைது செய்து தலைமறைவான வேலுசாமி மற்றும் ரஞ்சித்தை தேடி வருகின்றனா்.