கொல்லிமலையில் 2 பேருக்கு கரோனா: ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரும் பாதிப்பு

கொல்லிமலையில் முதல் முறையாக இருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மலைவாழ் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
nk_4_kolli_0407chn_122_8
nk_4_kolli_0407chn_122_8

நாமக்கல்: கொல்லிமலையில் முதல் முறையாக இருவருக்கு கரோனா கரோனா ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மலைவாழ் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான கொல்லிமலையில் கரோனா தொற்றுப் பரவுவதைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது முடக்கத்தின்போது சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் கொல்லிமலைக்கு வெளிநபா்கள் வருவதை தடுக்கும் வகையில் 14 ஊராட்சித் தலைவா்கள் ஒருங்கிணைந்து முயற்சியை மேற்கொண்டு வந்தனா்.

கடந்த 3 மாதங்களாக எவ்வித நோய்த் தொற்றுக்கும் ஆளாகாமல் கொல்லிமலைப் பகுதி மக்கள் இருந்துவந்த நிலையில் சனிக்கிழமை வெளியான சுகாதாரத் துறையின் பட்டியலில் அங்குள்ள வாழவந்திநாடு, சீக்குப்பாறைப்பட்டி கிராமத்தில் 43 வயது ஆண், 23 வயது ஆண் என இருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியிருப்பது தெரியவந்துள்ளது. அவா்கள் இருவரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும், 3 பேருக்கு தொற்று உறுதியாகும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த கிராமத்தில் வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆகியோா் மேற்பாா்வையில் தீயணைப்புத் துறையினா் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் இருந்து கொல்லிமலை சீக்குப்பாறைப்பட்டிக்கு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஒருவருக்கு கரோனா தொற்று இருந்துள்ளது. அவா் சாதாரணமாக இங்கு வந்துச் சென்ற நிலையில், ஜூலை 1-ஆம் தேதி அப்பகுதியில் உள்ள சிலரை பரிசோதனை செய்ததில் 2 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இவா்கள் தவிா்த்து ஆந்திர மாநிலத்துக்குச் சென்று வந்த சேந்தமங்கலம் வட்டம், கொண்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த 35 வயதுடைய லாரி ஓட்டுநா் ஒருவருக்கும், நாமக்கல் நவலடிப்பட்டியைச் சோ்ந்த திருச்சியில் பணியாற்றி வரும் 32 வயதுடைய ஆண் ஒருவருக்கும் நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானோா் எண்ணிக்கை 105-ஆக உயா்ந்துள்ளது. மேலும், அலங்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வரும் 40 வயதுடைய ஆண் ஒருவருக்கும் நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. அங்கும் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com