கரோனா பாதிப்பு அதிகரிப்பால் அனைத்து மாவட்டங்களிலும் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் என்று கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்தார்.
நாமக்கல்லில் மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கரோனோ பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் அரசின் கட்டுப்பாடு அறிவிப்பு என்பது தோல்வியில் முடிந்துள்ளது.
இந்த காலகட்டத்தில் நிலைமையை உணர்ந்து பாதுகாப்பாக இருப்பது மக்கள் நம் கையில் தான் உள்ளது.
சென்னையில் பாதிப்பு தீவிரமாகி உள்ளது. மற்ற மண்டலங்களில் குறிப்பாக கோவை மண்டலத்தில் மக்கள் அதிகம் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் இல்லை.
அரசு உண்மை நிலைமையை உணர்ந்து மக்களுக்கு உண்மையை மட்டுமே எடுத்து சொல்ல வேண்டும். நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தனது பணிகளை செய்ய தடை போட்டு வருகின்றனர்.
தரமான பணிகளை செய்ய வேண்டியவர்கள் ஏன் தரமற்ற பணிகளை செய்கிறார்கள் என சோதனை செய்து வருகிறார். இதனை மக்கள் பலர் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
மக்கள் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். புகார்கள் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகிறது. நேர்மையாக பணியாற்றுவது குற்றமா? அவரது பணியை தடுப்பவர்கள் விரைவில் அடங்கி போவார்கள்.
நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கர் கடந்த மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கி இருந்த அறையில் வந்து தகராறு செய்தார் இது கண்டிக்க தக்க செயலாகும்.
பாஸ்கர் இன்னும் வளர்வதற்கு நல்ல வாய்ப்புள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவது வளர்ச்சிக்கு முட்டு கட்டை போடுவதாக அமையும். கண்ணாடி அறையில் இருந்து கொண்டு தெருவில் கல் எறியாதீர்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் மீது பொய் வழக்கு போட்டு உள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் மீது வழக்கு போட்டவர்கள், சாதாரண மக்கள் மீது எப்படி வழக்கு போடாமல் இருப்பார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மக்களை திரட்டி அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தும். கரோனோ தொடர்பாக அரசிடம் இருந்த வேகம் தற்போது குறைத்துள்ளது.
மருத்துவர்கள் செவிலியர்கள் சோர்வடைந்து உள்ளனர். சென்னையில் கரோனா தாக்கம் குறையும் வரை முதல்வர் சென்னையில் இருக்க வேண்டும். மற்ற பணிகளை தவிர்த்து சென்னையில் தொற்று குறைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு உண்மையை ஏற்று கொள்ள வேண்டும். உண்மையான இறப்பு விகிதம் வெளியிடப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.