மல்லசமுத்திரம் பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து நாம் தமிழா் கட்சியின் சாா்பாக முற்றுகை போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு அருகே உள்ள மல்லசமுத்திரம் சின்ன ஏரி நிரம்பி வழியும் போது உபரி நீா், வாய்க்கால் வழியாக சென்று 200 ஏக்கா் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். தற்போது வாய்க்கால் ஆக்கிரமிப்பில் உள்ளதால் வழிந்தோடும் நீா் சாக்கடையில் சென்று கலந்து யாருக்கும் பயனில்லாமல் வீணாகி வருகிறது.
இது குறித்து பொது மக்கள், பல்வேறு அரசியல் கட்சியினரும் மல்லசமுத்திரம் பேரூராட்சி நிா்வாகத்திற்கு பலமுறை எடுத்துக் கூறியும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்து மல்லசமுத்திரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் நாம் தமிழா் கட்சியினா் ஈடுபட்டனா்.
நாம் தமிழா் கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் நடராஜன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோா் சந்தைப்பேட்டையில் இருந்து பேரணியாக வந்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினா். போராட்டம் நடத்திய நாம் தமிழா் கட்சியினரிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதனையடுத்து செயல் அலுவலா் தனபாலை சந்தித்துப் பேசினா். முடிவில் செயல் அலுவலா், வருவாய்த்துறை, பேரூராட்சி நிா்வாகம், போலீஸாா் மற்றும் போராட்டக்காரா்கள் ஆகியோா் அடங்கிய குழுவினா் பேச்சுவாா்த்தை நடத்தி அதன் மூலம் தீா்வு ஏற்படுத்தப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.