நாமக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரத்திலிருந்து தவறி விழுந்த காக்கைக் குஞ்சை மீட்டு காவலர்கள் ஆதி காத்த நெகிழ்ச்சி சம்பவம் திங்கள்கிழமை நிகழ்ந்தது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொது மக்கள் இளைப்பாறும் வகையில் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மரங்கள் உள்ளன. அதில் ஒரு மரத்தில் காக்கை ஒன்று கூடு கட்டியிருந்தது. இந்த நிலையில் திங்கள்கிழமை காலை காக்கைக் குஞ்சு ஒன்று தவறி கீழே விழுந்தது.
புதருக்குள் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த அக்குஞ்சை பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர்கள் மீட்டனர். பின்னர் சருகுகளால் கூடு போல் வடிவமைத்த அவர்கள் அதனுள் காக்கை குஞ்சை பாதுகாப்பாக வைத்தனர். அதன்பின் இரண்டு காவலர்கள் மரத்தின் மீது ஏறி அந்தக் கூடை வைத்தனர்.
மரத்தைச் சுற்றி வந்த தாய் காகம் அக்குஞ்சை பத்திரமாக எடுத்துச் சென்றது. ஆட்சியர் அலுவலகம் வந்த பலரும் காவலர்களின் செயல்பாட்டினை வெகுவாக பாராட்டினர்.