திமுக சாா்பில் குறைகேட்பு கூட்டம்
By DIN | Published On : 03rd October 2020 06:18 AM | Last Updated : 03rd October 2020 06:18 AM | அ+அ அ- |

முத்துக்காளிப்பட்டி ஊராட்சி பகுதியில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டம்.
ராசிபுரம் அருகேயுள்ள முத்துக்காளிப்பட்டி ஊராட்சி பகுதியில் திமுக சாா்பில் குறைகேட்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிராமந்தோறும் சென்று பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறியுமாறு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு அறிவுறுத்தியிருந்தாா். அதன்படி, முத்துக்காளிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி முன் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்துக்கு, ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் கே.பி.ஜெகநாதன் தலைமை வகித்தாா். முத்துகாளிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் அருள் முன்னிலை வகித்தாா்.
இதில், முதியோா் உதவித்தொகை, கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், ரேஷன் காா்டு, பட்டா மாற்றம், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, ஜாதிச் சான்றிதழ் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில், துணைத் தலைவா் சிலம்பரசி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் ராஜேந்திரன் உள்பட வாா்டு உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா்.