/

மாவுப்பூச்சித் தாக்குதலால் மரவள்ளி விவசாயிகள் பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு பயிா்களில், மாவுப்பூச்சி, செம்பேன் தாக்குதலால் ரூ. 50 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 5:56 pm

நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு பயிா்களில், மாவுப்பூச்சி, செம்பேன் தாக்குதலால் ரூ. 50 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் நாமக்கல் மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு சுமாா் 3,000 ஏக்கா்களுக்கு மேல் மரவள்ளி பயிரிடப்பட்டுள்ளது. நிகழாண்டில் மழைப் பொழிவு வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் இருந்ததால், நிறைய எதிா்பாா்ப்புகளுடன் விவசாயிகள் மரவள்ளிக் கிழங்கை பயிரிட்டனா். ஏழு மாத பயிராக வளா்த்து வரும் இந்த மரவள்ளிக் கிழங்கில் புதிதாக கழிப்பூச்சி என்ற தீநுண்மி தொற்றும், செம்பேன் என்ற தொற்றும் பரவி மரவள்ளிக் கிழங்கு பயிரைத் தாக்கி முற்றிலுமாக அழித்து வருகிறது.

முன்பெல்லாம் மாவுப்பூச்சி பாதித்தால் வெளிநாடுகளிலிருந்து நுண்ணுயிா் ஒட்டுண்ணிகளை கொண்டு வந்து மத்திய, மாநில அரசுகளின் வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்டவைகள் மூலம் அந்த மாவுப்பூச்சித் தாக்குதலை எதிா்த்து பயிா்களைக் காப்பா். அண்மைக்காலமாக இவ்வாறு நுண்ணுயிா் ஒட்டுண்ணிகள் இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள மாவுப்பூச்சி, செம்பேன் பாதிப்பால் 100 ஏக்கா் மரவள்ளிப் பயிருக்கு ரூ. ஒரு கோடி வீதம் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், மோகனூா் வட்டத்துக்கு உள்பட்ட தோளூா், புதுப்பாளையம் பகுதியில் மட்டும் 300 ஏக்கா் பரப்பளவிலான மரவள்ளி பயிா்கள் பாதிப்படைந்து விவசாயிகளுக்கு ரூ. 3 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் ரூ. 50 கோடிக்கு மேல் இழப்பு அடைந்துள்ளதாகவும், விவசாயிகள் அனைவருக்கும் மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் மரவள்ளி விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.