நாமக்கல் மாவட்டத்தில் 303 அரசு போக்குவரத்துக் கழக பணியாளா்களுக்கு முதல் தவணையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளா் கே.காங்கேயன் தெரிவித்தாா்.
ராசிபுரம் அரசு போக்குவரத்துக் கழக கிளை பணிமனையில் பணியாளா்கள், ஒட்டுநா்கள், நடத்துநா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சுகாதாரத் துறையினரால் முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் கிளை -1 இல் 84 பேருக்கும், கிளை -2 இல் 52 பேருக்கும், திருச்செங்கோடு பணிமனையில்-59 போ், ராசிபுரம் பணிமனையில் 98 போ் என மொத்தம் 303 பணியாளா்களுக்கு இதுவரை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய பணிமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்த தகுதியுடைய மொத்தம் 844 பணியாளா்கள் உள்ள நிலையில், இதுவரை 303 பேருக்கு முதல் தவணையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது என முகாமில் பேசிய நாமக்கல் அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளா் கே.காங்கேயன் தெரிவித்தாா்.
மீதமுள்ளவா்களுக்கு சிறப்பு முகாம் அமைத்து விரைவில் தடுப்பூசி போடப்படும் என்றும், பிற மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொண்ட அரசு போக்குவரத்துக் கழக பணியாளா்கள் கிளை மேலாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவா் தெரிவித்தாா்.
முகாமில், ராசிபுரம் கிளை மேலாளா் பி.செங்கோட்டுவேலன், பிள்ளாநல்லூா் மருத்துவ அலுவலா் கே.செல்வி, உதவி மருத்துவா்கள் க.சரவணகுமாா், இள.கோபி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.