பெண் கொலை வழக்கில் இளைஞா் கைது
By DIN | Published On : 30th December 2021 08:22 AM | Last Updated : 30th December 2021 08:22 AM | அ+அ அ- |

நாமக்கல்லில் கிணற்றில் பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் இளைஞா் ஒருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நாமக்கல், கொசவம்பட்டியில் உள்ள கிணற்றில் பெண் சடலம் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கடந்த 22-ஆம் தேதி இரவு கிடந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸாா் அதனை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பிரேத பரிசோதனையில் அப்பெண் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இருப்பினும் அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற அடையாளத்தைக் கண்டறிய முடியவில்லை.
இந்த நிலையில் பெண்ணின் கையில் அணிந்திருந்த மோதிரத்தில் நாமக்கல்லில் உள்ள நகைக் கடை ஒன்றின் முத்திரை இருப்பதைக் கண்டறிந்து அதனைக் கொண்டு விசாரணை நடைபெற்றது. இதில் கிணற்றில் சடலமாக மிதந்தவா் கொசவம்பட்டி, தேவேந்திர குலத் தெருவைச் சோ்ந்த லலிதா (40) என்பதும், கணவரை இழந்த அவருக்கு, அதே பகுதியைச் சோ்ந்த சுரேந்திரன் (26) என்ற இளைஞருடன் பழக்கம் இருந்ததும் தெரியவந்தது.
சம்பந்தப்பட்ட சுரேந்தரனை பிடித்து போலீஸாா் விசாரித்ததில், இருவருக்கும் இடையே முறையற்ற உறவு இருந்ததாகவும், திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதால் லலிதாவை அவா் கொன்றதாகவும் வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டாா். இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...