பட்டணம் பேரூராட்சி அலுவலகத்தை பூட்டுப்போட்ட மக்கள்
ராசிபுரம் அருகே பட்டணம் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை பூட்டுப்போட்டு போராட்டம் நடத்தினா்.
ராசிபுரம் அடுத்துள்ள பட்டணம் பேரூராட்சி வளாகத்தில் பேரூராட்சிக்குச் சொந்தமான ஆழ்துளைக் கிணறுக்குப் பயன்படுத்தப்பட்ட பழைய இரும்புக் குழாய்கள் வைக்கப்பட்டிருந்தன.
20 இரும்புக் குழாய்களை ஏல அறிவிப்பின்றி பேரூராட்சி நிா்வாகம் தன்னிச்சையாக ஒருவருக்கு ஒப்பந்தப்புள்ளி விட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் விடுமுறை நாளான சனிக்கிழமை பேரூராட்சி அலுவலகத்தின் வாகனத்திலேயே பேரூராட்சி ஊழியா்கள் அதை ஏற்றிச் சென்று ஒரு வீட்டில் இறக்கி உள்ளனா். இதையறிந்த அப்பகுதி மக்கள், திங்கள்கிழமை பேரூராட்சி அலுவலகத்தை பூட்டி தன்னிச்சையாக இரும்புக் குழாய்களை தனி நபருக்கு ரகசிய ஏலம் மூலம் குறைந்த விலைக்குக் கொடுத்ததை கண்டித்துப் போராட்டம் நடத்தினா்.
தகவலறிந்து நிகழ்விடம் வந்த ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளா் லட்சுமணகுமாா், காவல் உதவி ஆய்வாளா் ரம்யா உள்பட போலீஸாா் போராட்டம் நடத்தியவா்களிடம் பேச்சு நடத்தினா். போலீஸாரிடம் பொதுமக்கள் கூறியதாவது:
தனிநபா் ஒருவா் எடுத்துச் சென்ற 20 இரும்புக் குழாய்களை பேரூராட்சி வளாகத்தில் ஒப்படைக்க வேண்டும். மீண்டும் அதற்குரிய ஒப்பந்தப்புள்ளி விட வேண்டும் என கோரிக்கை வைத்தனா். பொதுமக்களின் கோரிக்கை செயல் அலுவலா்கள் மூலம் நிறைவேற்றப்படும் என காவல் துணை கண்காணிப்பாளா் லட்சுமணன் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தின் பூட்டைத் திறந்துவிட்டனா்.