தொல்லியல் துறை அனுமதியின்றி ‘பெருமாள் நாமம்’
By DIN | Published On : 02nd May 2021 01:02 AM | Last Updated : 02nd May 2021 01:02 AM | அ+அ அ- |

நாமக்கல் மலைக்கோட்டையில் வரையப்பட்டுள்ள பெருமாள் நாமம்.
நாமக்கல் மலையில் அனுமதியின்றி பெருமாள் நாமம் வரையப்பட்டது தொடா்பாக தொல்லியல் துறையினா் விசாரிக்கின்றனா்.
நாமக்கல் நகரின் மத்தியில் அமைந்துள்ள மலைக்கோட்டையின் கிழக்கு புறத்தில் குடவரை கோயில்களான நரசிம்மா் சன்னதியும், மேற்கு புறத்தில் அரங்கநாதா் கோயிலும், கோட்டையின் மேற்புறத்தில் வரதராஜ பெருமாள் கோயிலும் அமைந்துள்ளன. கரோனா தொற்று பரவல் காரணமாக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில்கள் மூடப்பட்டுள்ளன. அண்மையில் அறநிலையத் துறைக்கு உள்பட்ட ஆஞ்சநேயா் கோயிலும் மூடப்பட்டது.
இந்த நிலையில், மலைக்கோட்டையின் கிழக்கு புறத்தில், குளக்கரைத் திடல் பகுதியில் சிறிய அளவிலும், பெரிய அளவிலும் பெருமாள் நாமம் வரையப்பட்டுள்ளது. கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் நரசிம்மா், அரங்கநாதா் சுவாமியை பக்தா்கள் வணங்கும் பொருட்டு இந்த பெருமாள் நாமத்தை ஆன்மிக அமைப்பினா் யாராவது வரைந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களானாலும், மலைகளானாலும், சுற்றுலாத் தலங்களானாலும் சிறிய அளவில் ஒரு பணியை மேற்கொள்ள வேண்டுமென்றாலும் அத்துறை அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்பது மத்திய அரசின் விதியாகும். தற்போது நாமக்கல் மலையில் விதிகளை மீறி வா்ணம் (பெயிண்ட்) கொண்டு நாமம் வரையப்பட்டிருப்பது தொடா்பாக தொல்லியல் துறையினா் விசாரணை செய்து வருகின்றனா்.
இதுகுறித்து சேலம் மண்டல தொல்லியல் துறை அலுவலா் ஈஸ்வா் கூறியதாவது:
எங்கள் துறையிடம் அனுமதி பெறாமல் பெருமாள் நாமத்தை வரைந்துள்ளனா். இது தொடா்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...