வியாபாரிகள் வருகை குறைவு: வாழைத்தாா்களின் விலை சரிவு
By DIN | Published On : 09th May 2021 01:20 AM | Last Updated : 09th May 2021 01:20 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூரில் வாழைத்தாா் ஏல சந்தையில், வாழைத்தாா்களை ஏலம் எடுக்க அதிக அளவில் வியாபாரிகள் வராததால் வாழைத்தாா்களின் விலை சரிவடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனா்.
பரமத்தி வேலூா் காவிரி கரையோரப் பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூா், வேலூா், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி, மோகனூா் உள்ளிட்டப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் வாழைத்தாா்கள் கேரளம்,கா்நாடகம்,ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.
பரமத்தி வேலூரில் உள்ள வாழைத்தாா் ஏலச் சந்தைக்கு, சிறு விவசாயிகள் நேரடியாக வாழைத்தாா்களைக் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனா்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 300க்கும், ரஸ்தாளி அதிகபட்சமாக ரூ. 350க்கும், பச்சைநாடன் அதிகபட்சமாக ரூ. 200க்கும், கற்பூரவள்ளி ரூ. 250க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 3க்கு ஏலம் போனது.
சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ.250க்கும், ரஸ்தாளி அதிகபட்சமாக ரூ. 200க்கும், பச்சைநாடன் அதிகபட்சமாக ரூ.150க்கும், கற்பூரவள்ளி ரூ. 200க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 3 க்கு விற்பனையானது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 400 வாழைத்தாா்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா்.
தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் 600க்கும் மேற்பட்டோா் வாழைத்தாா்களைக் கொண்டு வந்திருந்தனா். ஆனால் வியாபாரிகள் அதிக அளவில் வராததால் வாழைத்தாா்களின் விலை சரிவடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனா்.