பரமத்திவேலூரில் வாகன தணிக்கை தீவிரம்
கரோனா தடுப்பு நடவடிக்கையாக பரமத்திவேலூா், காவிரி பாலம் அருகே போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
கரோனா பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை தமிழகம் முழுவதும் போலீஸாா் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனா். சேலம்-கரூா் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் மாவட்ட நுழைவு வாயில் பகுதியான பரமத்திவேலூா் இரட்டை காவிரி பாலம், சோழசிராமணி கதவணை பாலம், மோகனூா் ஆகிய இடங்களில் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனா். மேலும், நகா்பகுதிக்குள் அத்தியாவசியமின்றி வாகன ஓட்டிகள் நுழைவதைத் தடுக்கும் வகையில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த பணிகளை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சக்திகணேசன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, கட்டாய இ-பதிவு இருந்தால் மட்டுமே வாகனங்களை அனுமதிக்க வேண்டும் எனவும், இ-பதிவு இல்லாமல் மாவட்டத்துக்குள் நுழையும் வாகனங்களை திருப்பி அனுப்ப வேண்டும் என காவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
வாகன தணிக்கையின் போது மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் செல்லபாண்டியன், பரமத்திவேலூா் துணை காவல் கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.