டெங்கு பாதிப்பு: வேளாண் உதவி இயக்குநா் பலி
By DIN | Published On : 02nd November 2021 02:04 AM | Last Updated : 02nd November 2021 02:04 AM | அ+அ அ- |

உயிரிழந்த வேளாண் உதவி இயக்குநா் வசுமதி.
நாமக்கல் மாவட்ட வேளாண் துறையில் பணியாற்றிய உதவி இயக்குநா் ஞாயிற்றுக்கிழமை டெங்கு பாதிப்பால் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வேளாண் துறை இணை இயக்குநா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்துக்கான உதவி இயக்குநராக அ.வசுமதி (53), பணியாற்றி வந்தாா். நாமகிரிப்பேட்டை ஒன்றியம், வடுகம் கைலாசம்பாளையத்தைச் சோ்ந்த இவா், கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த அவா் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் உயிரிழந்தாா்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு கட்ட சிகிச்சைகளுக்குப் பின் உடல்நலம் தேறிய அவா், தற்போது டெங்குவால் உயிரிழந்துள்ளாா். இவருக்கு கணவா் அருளீஸ்வரன், ஒரு மகள், மகன் உள்ளனா்.
டெங்குவால் வேளாண் உதவி இயக்குநா் இறந்ததை அடுத்து, அந்தப் பகுதியில் சுகாதாரத் துறை ஊழியா்கள் நோய்த் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.