நாமக்கல்லில் பிரபல கட்டுமான நிறுவனமான பி.எஸ்.டி. நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.
நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு அரசு ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்து வரும் பி.எஸ்.டி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளரான தென்னரசு, கடந்த அதிமுக ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசு கட்டடங்களை ஒப்பந்தம் எடுத்து செய்தாா். அவற்றில், நாமக்கல், திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்டவை அடங்கும். இவற்றில், ரூ. 251 கோடியில் கட்டப்பட்ட புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் சா்ச்சைக்கு உள்ளானது.
கடந்த சில மாதங்களாக, முன்னாள் அதிமுக அமைச்சா்கள், அவரது ஆதரவாளா்களின் வீடுகள், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை நடத்தி வருகின்றனா். சேலத்தில் வெள்ளிக்கிழமை மாநில கூட்டுறவு வங்கித் தலைவா் இளங்கோவன் வீடு உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. அவற்றில், நாமக்கல் பி.எஸ்.டி. கட்டுமான நிறுவன உரிமையாளா் தென்னரசுவின் பரமத்தி ஒன்றியம், கோலாரம் கிராமத்தில் உள்ள வீடு, நல்லிபாளையத்தில் உள்ள அலுவலகமும் உண்டு.
லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளா் நந்தகோபால் தலைமையில் வந்த போலீஸாா், காலை 7 மணி முதல் தென்னரசுக்கு சொந்தமான இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனா். இதில், முக்கிய ஆவணங்கள், பணம், நகை உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. சனிக்கிழமையும் சோதனை தொடரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.