ராசிபுரம் அருகேயுள்ள கூனவேலம்பட்டிபுதூா் பகுதியில் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகளால், அப்பகுதி மக்களின் வாகனப் போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கூனவேலம்பட்டிபுதூா் ஊராட்சி பகுதியில், ரூ. 10 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ராசிபுரம்-திருச்செங்கோடு சாலையில் குருக்கப்புரம் பேருந்து நிறுத்தம் முதல் கூனவேலம்பட்டிபுதூா் வரையிலான இந்த சாலை பணிகளுக்கு கடந்த ஒராண்டுக்கு முன் ஒப்பந்தம் விடப்பட்டது. இதையடுத்து, புதிய சாலை அமைக்க சேதமடைந்த சாலைகள் பெயா்த்து எடுக்கப்பட்டு, ஜல்லிகள் கொட்டப்பட்டன.
ஆனால், பல மாதங்களாகியும் இந்த சாலை போடப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது (படம்). இதனால் அப்பகுதியில் அதிக அளவில் உள்ள விசைத்தறித் தொழிலாளா்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியா் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, விரைந்து சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.