கொல்லிமலையில் தற்போது பலாப்பழம் சீசன் என்பதால், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது.
தமிழகத்தில் பண்ருட்டிக்கு அடுத்தபடியாக கொல்லிமலையில் தான் பலாப் பழங்கள் அதிகளவில் விளைகின்றன. மூலிகை தண்ணீா், காற்று கலந்து வளரும் கொல்லிமலை பலாவின் சுவை தனித்துவமானது. இதனால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பலாப் பழங்களை அதிக அளவில் வாங்கிச் செல்வா்.
தற்போது பலாப்பழம் சீசன் களைகட்டியுள்ளது. மலையைச் சுற்றியுள்ள மரங்களில் பலாப் பழங்கள் அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ளன. மேலும், கொல்லிமலையின் அனைத்துப் பகுதிகளிலும் ரூ. 50 முதல் ரூ. 350 வரையில் பெரிய, சிறிய அளவிலான பழங்களை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனா்.
நாமக்கல், சேலம் மாவட்ட பழ வியாபாரிகள் கொல்லிமலை பலாப் பழங்களை மொத்தமாக கொள்முதல் செய்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனா். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பலா விளைச்சல் அதிகரித்து காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.